Mittwoch, Februar 12, 2025

பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்…

ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன்  –  விமலன்

பிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள், தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பதென்றே தெரியவில்லை. நான் எழுதியதில் ஆதியுமில்லை, அந்தமுமில்லை என்பதே உண்மை. நடுவில பல பக்கங்களைக் காணோம் என்ற நிலையும் உண்டு. ஏதோ என்னுடைய நினைவிற்கும் அறிவிற்கும் தெரிந்த சிலவற்றையாவது பகிர்ந்து கொள்வதில் ஆறுதலடைகிறேன்.

வரலாறு என்பது தனிநபரின் பார்வைக்குள் அடக்கி விட முடியாதது. 1988 களில் எனது அப்பா மூலம் முதற் தடவையாக பிறேமராஜன் மாஸ்டரைப் பற்றி அறிந்திருந்தேன். அவருடைய அப்பாவும் எனது அப்பாவும் நெருங்கிய உறவினராக(அத்தான் முறை ) இருந்ததோடு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தார்கள். இருவருக்கும் ஒரே வயது (1933). ஒன்றாகப் படித்திருந்தார்கள். அழகு(அழகரத்தினம்), தியாகு( தியாகராஜா) ஆகிய இருவருடைய நாட்டுப் பற்றும் ஒன்றாகவே இருந்து வந்திருந்தன. இருவருடைய குடும்பங்களும் அதற்காகப் பல தியாகங்களையும் செய்துள்ளன

1988 காலப்பகுதியில் எமதூரில் விடுதலைப்புலிகளின் முதல் நின்ற அணி செல்ல, புதிய அணியொன்று வந்திருந்தது. அவர்கள் தும்பளை நாற் சந்தியில் அமைந்திருந்த சதாசிவம் பரியாரியரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அவ் வீடு எமது வீட்டுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்றது. அவ்வணிக்கு மொறிஸ் அவர்கள் தலைமை தாங்கி வந்திருந்தார். அவர் என்னை முதன்முதலாகக் கண்டபோது யார் என்று வினவினார். நான் என்னுடைய பெற்றோரையும் சகோதரர்களையும், எனது வீட்டையும் அவருக்கு அடையாளப் படுத்தினேன். உடனே அவர், தான் எனது உறவினன் என்றும், என்னுடைய வீட்டில் தான் இங்கு இருப்பதாக சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார். இந்திய இராணுவக் காலப்பகுதியில் பருத்தித்துறையில் இருந்த புலிகளின் அணி, சுழற்சி முறையில் எமது ஊரிலிருக்கும் எல்லோருடைய வீட்டிலும் தங்குவார்கள். அதை அவர்கள் வழமையாகவே வைத்திருந்தார்கள். ஒருவேளை, யாராவது இவர்களை இராணுவத்துக்கு காட்டிக் கொடுக்காமல் இருப்பதுக்காகவோ தெரியாது.

1988களில் இந்திய இராணுவத்துடனான மோதல்கள் தீவிரம்பெற்றிருந்த வேளையில் எனது இரண்டாவது அண்ணன் ரவி (மேஜர் தாகூர் ) திருகோணமலைக் காட்டிலிருந்து மணலாற்றுக்கு தலைவரிடம் வந்திருந்தார். அவ்வேளை அவர், முள்ளியவளைக்கு பணியின் நிமித்தம் வந்து போவதுண்டு. அப்போது பிறேமராஜன் அத்தான் வீட்டிற்கும் அவர் வந்து போவதுண்டு.

1988களில் மிகக் கடினமான பயணங்களை மேற்கொண்டு என் அப்பா, என் அண்ணா( ரவி-மேஜர் தாகூர்) வைச் சந்திப்பதற்காக வற்றாப்பளையிலிருக்கும் பிறேமராஜன் மாஸ்ரர்(அத்தான்) வீட்டுக்கு வந்து போவார். 1996 இல் நாங்கள் புதுக்குடியிருப்பில் இருக்கும் பொழுது பிறேமராஜன் மாஸ்ரருடன் மேலும் அதிகமாக நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வாய்த்தன. அவருடன் அவருடைய வீட்டில் சில காலங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தேன். அவ்வேளை நானும், அவருடைய உறவினரான ரூபன் மற்றும் வாசு ஆகியோரும் ஒன்றாக அங்கு தங்கி இருந்தோம். அவர் மட்டுமே வீட்டிலிருப்பார். மற்றைய குடும்ப உறுப்பினர்கள் வவுனியாவுக்குச் சென்றிருந்தார்கள்.

அவருடைய வீட்டு வெளிவாசலில், வற்றாப்பளைச் சந்தியில், நீண்ட பனங்குற்றி ஓன்று இருக்கையாகப் போடப்பட்டிருந்தது. பின்னேரம் 5 மணியளவில் அவர் வெளியே சென்று அக்குற்றியில் அமர்ந்து அவ்வூர் மக்களோடு அளவளாவுவார். அவர் சாதாரண பாமரமக்கள் தொடக்கம் புத்திஜீவிகள், போராளிகள், ஏழைகள், பணக்காரர்கள் என எல்லோருடனும் சாதி மத பேதமேதுமின்றி, எந்தவித பாகுபாடும் காட்டாது மிகவும் அன்பாகவும் அவ்வூராருக்கான நகைச்சுவைப் பாணியிலும், தனக்கேயுரிய நகைச்சுவைப்பாணியிலும் அவரவர்க்கேற்ப பேசிக் கொண்டிருப்பார். ஒவ்வொருவருக்கேற்ற மாதிரி அவர்களின் பாணியிலேயே கதைப்பார். அவருடன் இருக்கும் போது என்னை மறந்து சிரித்துக் கொண்டேயிருந்திருக்கிறேன்.

அவருடன் தங்கியிருந்தவேளையில், அவருடைய தமிழ், ஆங்கிலப் புலமை, பொது அறிவு, அறிவியல் என எல்லாப் புலமைகளையும் அந்த ஒரு மனிதரில் ஒன்றாகக் கண்டு வியந்திருக்கிறேன்.

அப்போது பிறேமராஜன் மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவொன்றின் முக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரால் பல ஆங்கிலப் புத்தகங்கள் (போராட்டம், புலனாய்வு, போரியல், அறிவியல், அரசியல்) தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தக வடிவில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. அத்தோடு இல்லாமல் பல ஆங்கிலத் திரைப்படங்கள் கூட தமிழ் மொழிபெயர்ப்போடு அங்கு வெளிவருவதற்கு அவருடைய பணிகள் காத்திரமாக அமைந்திருந்தன.

அவருடைய கவிதைகள், பட்டிமன்றம் போன்ற சிறப்பான நிகழ்வுகள் புலிகளின் குரல் வானொலியில் அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இவர் அதிகம் வெளியில் தெரியாதவராகவே `தீட்சண்யன்´ என்ற புனைபெயரிலேதான் தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டு வந்திருந்தார்.

இவர் ஓர் சிறந்த ஆங்கில ஆசிரியராகவேதான் பருத்தித்துறையிலிருந்து முள்ளியவளைக்கு வந்திருந்தார். பின்னர் அங்கேயே தனது நிரந்தர வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருடைய மனைவியும் அவருக்கேற்ற ஒரு சிறந்த துணைவியராகவே இருந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையும் பிறந்திருந்தார்கள். மூன்றாவது மகன் பரதன் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் படையணியில் இணைந்து, கப்டன் தரத்தில், இறுதியுத்தத்தில் இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் வீரமரணத்தைத் தழுவியிருந்தார். தனது தம்பியரில் ஒருவனான மொறிஸ் இன் இயற்பெயரான பரதராஜன் என்னும் பெயரையே சுருக்கி பரதன் என இந்த மகனுக்குப் பெயர் சூட்டியிருந்தார்.

பிறேமராஜன் அத்தான் குடும்பம் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர் என்று சொன்னால் மிகையாகாது. இடப்பெயர்வால் நாங்கள் புதுக்குடியிருப்புக்கு வந்த போது அங்கு உறவினர்கள் என்று சொல்ல அவர் குடும்பம் மாத்திரமே இருந்தது.

அவருடைய இரு சகோதரர்கள் எம் மண்விடுதலைக்காக விடுதலைப்புலிகளுடன் இணைந்து களமாடி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டவர்கள்.

அவர்களில் ஒருவர் கப்டன் மொறிஸ்
இவர் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார்.

மற்றையவர் கப்டன் மயூரன்
இவர் தலைவரின் நேரடி ஜாக்கெட் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார். 1993 இல் தவளைப்பாய்ச்சல் என்று புலிகளினால் பெயர்சூட்டி நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகம் தாக்குதலில் சைவர் படையணியில் இருந்து தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார். இவருடைய நினைவாகவே பதுங்கிச் சுடும் படையணிக்கு “மயூரன் பதுங்கிச் சுடும் படையணி” என்று விடுதலைப்புலிகளினால் பெயரிடப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படையணியானது விடுதலைப்புலிகளின் முதன்மையான பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பெரும் வலுச் சேர்த்திருந்தது. கூடவே இப்படையணியானது வெளியே அதிகம் தெரியாதவகையில் தங்களது காத்திரமான பணிகளையும் செய்து முடித்திருந்தது.

– விமலன்

(விமலன், பிரிகேடியர் மணிவண்ணனினதும் சுரங்கத்தாக்குதலில் வீரமரணமடைந்த மாவீரன் தாகூரினதும் சகோதரன்)

பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும்

திரு.க.ஜெயவீரசிங்கம் BA (ஆசிரியர்) அவர்கள், தீட்சண்யம் நூலுக்கு எழுதிய முன்னுரை

தீட்சண்யம் - எஸ். ரி. பிறேமராஜன்

கவிஞர் தீட்சண்யன் எனது நெருங்கிய நண்பர். பிறேம் மாஸ்ரர் என்று அறியப்படுகின்ற அந்த இனிய மனிதரின் உள்ளக்கிடக்கைகளின் சில பக்கங்களை அறிந்தவன் என்ற தகுதியில் இந்த தீட்சண்யத்துக்கான முன்னுரையை எழுத விளைகிறேன்.

தீட்சண்யன் ஒரு யதார்த்தவாதி. தமிழீழத் தேசிய விடுதலைப் போரில் இரண்டு மாவீரர்களை அர்ப்பணித்த ஒரு குடும்பத்தின் மகன். அவரது மும்மொழிப் புலமை விடுதலைக்கு அவர் ஆக்கபூர்வமான பணியாற்ற அவருக்குத் துணை நின்றது. அவரோடு தொடர்பு பட்டவர்களுக்கு மட்டுமே அவரது பணிகள் தெரியும். தனது பணிகளின் நெருக்கடிகளிற்கு இடையில், தனது கால் இழப்பின் பாதிப்பின் மத்தியிலும் அந்த அற்புதமான கவிஞன் பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும் என்று சொல்கின்ற அளவுக்கு ஆழமான கவிதைகள் ஊற்றெடுக்கும்.

தனது அங்கவீனத்தை எண்ணி நொந்து கொள்ளும் சில மாலைப்பொழுதுகளில் - அந்த நெஞ்சத்தின் வேதனை என்னையும் பாதித்ததுண்டு. அந்தப் பொழுதுகளில் அந்தக் கவிஞன் - ஒரு குழந்தையைப் போல தேம்பியதுண்டு. எனினும் மறுகணமே தன்னைச் சுதாரித்துக் கொள்ளும் ´மீண்டும் தொடங்கும் மிடுக்கு´ அவனிடம் இருந்த படியால்தான் காலத்தால் அழியாத கவிதைகளையும் விடுதலைப் போருக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பையும் அவனால் வழங்க முடிந்தது.

´தீட்சண்யம்´ என்ற இந்த நூலில் தீட்சண்யன் சிங்களத்தின் எறிகணை வீச்சுக்கு காலை இழக்க முன்னும் பின்னும் எழுதிய கவிதைகள் உள்ளன. ´அன்னைக்கோர் கடிதம்´ என்ற கவிதை தீட்சண்யனின் சோகத்தை எங்கள் இதயங்களிலும் ஊடுருவ வைக்கிறது.

கொள்ளிக்கும் கொடுப்பனவு இல்லாமற் போய் விட்ட
´ஷெல்`லின் பாற்பட்ட வெறும் ஊனனாகி விட்டேனே
என்ற வரிகள் அவரது துயரத்தை கோடிட்டுக் காட்டுகின்றன.

தீட்சண்யனின் ´எங்கே போகிறோம்...?` என்ற கவிதை அன்றைய வன்னியின் அவல நிலையை ஒவ்வொரு வன்னித்தமிழனும் சொல்ல நினைத்து முடியாமல் போய் விட்ட வார்த்தைகளை மிக அழகாகச் செப்புகிறது.
குப்பி விளக்கிற்கு எண்ணெய் தேடி
குடும்பக் காட்டுடன் கியூவில் நிற்கிறோம்
உண்மையில் நாம் எங்கே போகிறோம்...?
என்று கேட்கின்ற தீட்சண்யனின் கேள்வி யதார்த்தமானது.

´போராட்டமே வாழ்வாக..´ என்ற கவிதையில் பெண்ணுக்கு அவர் விடுக்கும் அழைப்பு பாரதியின் பரம்பரை ஈழத்திலும் தொடர்கிறது என்பதை எடுத்தியம்புகிறது.
குனிந்து நடந்து
குரல் வளையது நலிந்து
நின்றது போதும்
நிமிர்ந்து தோளில் போர்க்கலனைச்
சுமந்து வந்திடு தோழி!
என்று அவர் விடுக்கும் அழைப்பு அவரின் பெண்கள் தொடர்பான கருத்தோட்டத்திற்கு சான்று பகர்கின்றது.

´திரும்புங்கள்.. வாருங்கள்.. ஏந்துங்கள்..´ என்ற கவிதை இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலப்பகுதியில் எழுதப்பட்டது. அதில் கவிஞர் சொல்கிறார்
...சொந்த மண்ணிலே வீதியிலே
எங்கள் காணிகள் மனைகளில்
மனைவிகளில் கூடவா
மாற்றானின் விரல்கள்..?
எவ்வளவு நாசூக்காக எம்மீது திணிக்கப்பட்ட அடக்கு முறை சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

´கரும்புலிகள்´ என்ற கவிதையொன்றில்
முகம் தெரியாமலே மறைந்து போன இவர்கள்
சில சமயங்களில்
சுவரொட்டிகளிலும் கூடத் தலை காட்டுவதில்லை...
என்ற வரிகள் எவ்வளவு தூரம் ஆழமானவை..!

கவிஞர் தீட்சண்யனின் கவிதைகள் அர்த்தம் நிறைந்தவை மட்டுமல்ல. சந்தம் நிறைந்தவையும் கூட. ´இந்த நூற்றாண்டில் இவன் போல் யார் உளர்´ என்ற கவிதையில்
உடலைக் கருக்கியுன் குடலைச் சுருக்கி நீ
கடலைப் பிளந்திடும் தியாகப் போர் தொடுத்தாய்
விடலைப் பருவத்து விருப்புகளைத் துறந்தாய்
குடலைப் பருவத்தில் குலத்துக்காய் மடிந்தாய்...
என்ற வரிகள் இதற்குச் சான்று பகர்வன.

புரட்சிக் கனலாக சுடரும் இவன் மார்கழிப் பனியாக குளிரும் கவிதைகளையும் எழுதுவதில் வல்லவன். ´ரசனை´, ´லயம்´ என்ற கவிதைகள் இதற்குச் சான்று பகர்கின்றன.

இறுதியாக...
இங்கே தயவு செய்து மலர் போட வேண்டாம்
தமிழீழத்துக்கு கொஞ்சம் உரமேற்றுங்கள்...
என்ற வேண்டுகோளுடன் தீட்சண்யனின் பேனா மௌனித்து விட்டது. என்றாலும் அவன் கவிதைகள் ஊடாக காலமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பதை ´தீட்சண்யம்´ உங்களுக்கு உணர்த்தும்.

- திரு.க.ஜெயவீரசிங்கம் BA (ஆசிரியர்)
வற்றாப்பளை

Sonntag, Oktober 25, 2009

மாவீரன் துயிலும் இல்லம்

வெறுமே நிணமும் நீரும் கொண்ட ஒரு பிண்டமல்ல
வீரமும் விடுதலை வேகமும் கொண்டவன்
ஈகமும் மனதில் ஈழமும் கண்டவன்
தானைகள் தகர்த்தொரு தடவழி சமைத்தவன்
எங்கே போர்க்களம் எங்கே பகைவன்-என
வானமும் நடுங்கிட வையகம் நடந்தவன்
மார்பிலே குண்டேற்றி மரணத்தை அணைத்தவன்
உறங்கிடும் கதை சொல்லும் உண்மையின் தலமிது

கற்களும் முட்களும் காலடி நெருட
புற்களும் புழுதியும் பாதம் மறைக்க
கைகளில் சுடுபொறி கருத்துடன் ஏந்தி
விழிகளில் விடுதலைச் செம்பொறி தாங்கி
தலைவனின் காலடித் தடமது தொடர்ந்து - தன்
விழுப்புண் வாங்கிய திண்ணுடல் நோக
காகமும் கழுகும் உண்டிடவென்று
எதிரியைக் கிழித்தவன் உறங்கிடும் பூமி

மக்கள் வாழ
மக்கள் வாழும் மண்ணது மீள
கற்கை மறந்தவன்
தாயின் தழுவல்
பொற்கை மறந்தவன்
சொந்த வீட்டுப்
படுக்கை மறந்தவன்
புதுத்
தளிர்க்கை மறந்தவன்
பந்த பாசம் எல்லாம் ஒன்றாய்
வெந்து மாளும்
வேட்கை நிறைந்தவன்

மண்ணிலே தவழ்ந்து
மண்ணிலே நடந்து
மண்ணையே குருதியால் நனைத்து
மண்ணுக்காய் உரமாகி
கண்ணொத்த விடுதலைக்காய்
விண்ணையே அளந்தவன்
விழி மூடும் தலமிது

மாண்டவர்க்கு மனங்கலங்கி
மண்ணிட்ட சமாதியல்ல
வாழ்பவர்கள் சென்று நிதம்
வழிபடுமோர் சந்நிதி
வீழ்ந்தவர்கள் கதை முடிக்கும்
விடுகதையின் முடிவல்ல
சேர்ந்து நிதம் களம் புகுவோர்
வழிபடுமோர் பொன்னடி

மாவீரர் பாதங்களை அடி தொழுவோம் நாங்கள்
ஈகச் சுடரதனில் வழிதெளிவோம் நாங்கள்
மானம் பெரியதெனும் படையணியில் செல்வோம்
ஈனம் எதனையுமே இடர் கண்டு ஏற்கோம்
தானம் தவமிரண்டும் போரினிலே காப்போம்
வானம் திரண்டிடினும் வந்த வழி மீளோம்
ஈழம் எமதெனவே இரு கண்ணில் ஏற்போம்
தலைவர் வழி காட்டும் திசை நோக்கிச் செல்வோம்

-தீட்சண்யன்

பிரசுரம் - எரிமலை-47 (மார்ச் 1994)

Dienstag, Mai 01, 2007

ஒன்று படு தொழிலாளர் வர்க்கமே

வென்றிடுவோம் தமிழீழம் விரைவிலே

திங்கள் முகம் சிரிக்க தென்றல் தவழ்ந்து வர
மஞ்சள் முகந் திருத்தி மங்கையர்கள் வழியனுப்ப
அந்திக் கடற்கரையின் மண்ணில் தடம் பதித்து
ஆண்மைத் திண்தோளார் ஆழிப் படகேறி
நுரைசேர் அலைகளின் மேல் எகிறி விழுந்தோடி
கரைசேர் நாள்வரைக்கும் காதில் ஒலிக்கும்வகை
குரல் சேர் கூச்சலுடன் எம்பிக் கையசைக்கும்
காட்சி தனை இனி நாம் காண வெகு தூரமில்லை.

பல்லாயிரம் தொழில்கள் செழித்திருந்த தேசமதில்
வல்லாதிக்க வெறி வாலாட்டத் தொடங்கியதால்
முள்ளால் நிறைந்த வெறும் தரிசாகிப் போச்சு நிலம்
அல்லாடிப் போய் நாங்கள் அலுக்குலைந்து போய் விட்டோம்
தொழில்கள் சிதைந்ததனால் தோள்கள் துவண்டிட்டோம்.
இவையெல்லாம் நிலைமாறும் நேரம் இனி வருகுதையா
அவை யெல்லாம், உலகத்துப் பேராளர் பேச்சரங்க அவை எல்லாம்
ஈழத்துப் போர்முரசின் அதிர்வோசை ஒலிக்குதய்யா.

தேசத்தின் உடன்தேவை ஏதென நீ புரிந்து
நாசம் தவிர்ப்பதற்காய் நாட்டமுடன் களமிறங்கி,
உழைப்பால் ஒன்றுபட்டு உதிரத்தால் வழிசமைத்து - எம்
வெற்றித்தேர் முன்நகர உந்துவிசை ஆகி நின்றால்
ஜயசிக்குறுக் களெல்லாம் சுக்கு நூறாகிவிட
எதிரிக்கு பயசிக்குறு வந்து பாய்ந்தோடிப் போய் விடுவான்
எமக்கே ஜயசிக்குறு வாகி எம்தேசம் நிமிர்ந்தெழுந்து
தமிழீழம் இதுவென்றே புலிக்கொடியோடு உறுமி நிற்கும்.

கருத்தொருமித்து மனம் கடனே எம்பணியென்று
விருத்தெரியா விடலையெல்லாம் வீரமுடன் அணிசேர்ந்து
பொருள் தெளிந்து போரின் கலை பயின்று
விருப்புடனே விடுதலைக்காய் கறுப்பு உடைதரித்து
காரிருளோ கடலோ கானகமோ ஏதென்றால் எமக்கென்ன
கிழித்தெறிவோம் எம்முடலை தகர்த்தழிப்போம் தருக்கர்களை
என வரித்து
தேசத்தின் விடியலுக்காய்,
தேசத்து நாயகனின் சுடரொளிக் கண்ணசைவில் பொருது நிற்க
நாமெல்லாம் இழை பிரிந்து ஈனர்களாய் நிற்பதுவோ!?

இலட்சியத்து வேள்விக்காய் ஒன்று பட்டு நாமுழைப்போம்
கலைத்துவமோ களப்பணியோ கனகடின உடலுழைப்போ
கடலோ வயலோ கானகமோ தெருவோ வாய்க்காலோ
கணக்கோ, வேறெந்தக் கணணித் தொழிற்துறையோ
மருத்துவமோ மாந்தர்க்கு உதவும் மனுப்பணியோ
எத்துறைசார் ஏந்தல்களும் தோளோடு தோளிணைந்து
தொழிலாளர் வர்க்கமென்ற குடையின் கீழ்
மனமிணைந்து தொடர்ந்தாலே
தமிழீழ வெற்றி வரும் வெகு விரைவில்.

ஒன்றுமே குறை கூற ஒவ்வாத தலைவன் உள்ளான்
தமிழ்ப் பெண்டிரும் களமிறங்கிப் போராடும் நிலை கொணர்ந்தான
வையமே வியந்திடும் கரும்புலிப்படை வகுத்தான்
எவ்வணியும் பெற்றிரா நெறியாள்கை எமக்குண்டு
இதுவரை கண்டிரா விறல்வீரம் இங்குண்டு
இத் தலைவன் காலமதே எம்மவர்க்கு விடியல் தரும்
இப்பொற் தலைவன் வழியிலெங்கள் புனிதமண் மீண்டுவரும்.

முழுவளமும் முனைப்புடனே முப்புலமும் பயன்படுத்தி
வழுவா வழிப்பாதையில் அணிவகுத்து நின்றே நாம்
பொருதாத் திசையென்று ஏதொன்றும் வைக்காமல்
முழுதாய் முற்றிலுமாய் முழுமூச்சாய் முகடதிர
உழுவோம் உழைத்திடுவோம் போருக்கு உரமேற்றி
தொழிலாளத் தோழர்கள் நாம் திரள்வோம்
தீயெனவே தடைகளெலாம் களைவோம்
எதிரி தன் சிரமேற் கைகூப்பி தொழுதோடுவான்
பிறகென்ன மலர்வோம் நாம் ஈழமென!

தீட்சண்யன்
1.05.98

ஒலிபரப்பு - புலிகளின்குரல் வானொலி - 1.05.98
வாசித்தவர் - கனிமொழி

Freitag, Mai 13, 2005

ஜயசிக்குறு யாழுவா

ரிவிரச வுடன் நீ திமிர்கொண்டு நின்றாய் -புலியின்
முதுகெலும்பு முறிந்ததென்று முகடதிரக் குரைத்தாய்!
சத்ஜெய உனக்குச் சறுக்கிப் போய் விட்டாலும்-வேங்கை
வேகம் குறைந்ததென்று வீறாப்புப் பேசினாய்!
எடிபல வில் நாங்கள் எட்ட விலகிநிற்க- தமிழன்
கொட்டம் அடங்கிற்றென கும்மாளக் குதிபோட்டாய்!

ஒன்றரை மாதத்தில் நாடெல்லாம் வேட்டொலிக்க
கண்டி வழிப் பாதையிலே கவசவாகனம் ஓட்டி
பரந்தன் சந்தியிலே படையோடு படைசேர்ந்து
கரங்கள் குலுக்கிப் படங்களுக்குப் போஸ் கொடுத்து
ஆனையிறவு ஊடாக அகலக்கால் வைத்து
யாழ்ப்பாதை திறப்பதாய் வாய்ப் பந்தல் போட்டு நின்றாய்.

ஜயசிக்குறு என்று பெயரிட்டுப் படைகுவித்து- இப்போ
பயசிக்குறு ஆகி பாதியிலே நிற்கிறாய்
ஓடிப்போன உங்கள் உசாரான தோழர்களைத்
தேடிப் பிடிப்பதே உனக்குப் பெரும்பாடாய் போச்சுமச்சான்
மாறிமாறி நீ தேதிகள் குறித்து விட்டு-இப்போ
வருடமொன்று முடிந்ததென்று வாடிப்போய் நிற்கிறாய்.

ரத்வத்தையும் ராட்சசியும் மெத்தைகளில் படுத்திருக்க-நீ
நுளம்போடும் நோயோடும் பற்றையிலே படுப்பது ஏன்?
தலைவர்களின் பந்தயத்தில் நீதானா பலிக்கடா?
முல்லைத்தீவுமுகாம் முற்றாக அழிந்த பின்னும்
செத்தவர்கள் பட்டியலை நீ பார்க்க முடிந்ததா?
உன்கதியும் அதுதானென அறியாயோ முட்டாளே!

யாழ்ப்பாதை திறக்க வந்த யாழுவா இப்போ நீ
இடைப்பாதை பலதிறந்து ஏங்கி முழிக்கின்றாய்-எமது
போர்ப்பாதை வேகத்தில் நின்தோழர் பலரிழந்தாய்!
தார்ப்பாதை காணாமலே டாங்கிகள் பலவிழந்தாய்!
புதுப்பாதை வழிவந்து பூசை நடத்த முதல்
நேர்ப்பாதை பிடித்து நீ ஊருக்கு மாறுமச்சான்!

தீட்சண்யன்

Samstag, November 27, 2004

தமிழீழம் மலரட்டும்

நீண்ட பல்லாண்டுகளாய் நீறு பூத்திருந்த எங்கள்
கொண்டாட்ட நினைவுகளும் குதூகலக் கனவுகளும்
தூண்டிய மணிவிளக்காய் சுடர்விடும் இந்நாளில்
மலர்க தமிழீழம்-நம் மக்கள் மனம் நிறைய.

களத்தினில் இளைஞர்கள் களித்து விளையாடிட
மனைகளில் மாதர்கள் மகிழ்ந்து கொண்டாடிட
புத்தெழில் மங்கையர் நர்த்தனம் ஆடிட
புனிதப் போர் வீரர்கள் பொலிவுடன் போரிட
எத்திசை பார்க்கினும் சுதந்திரம் பீறிடும்
தனித் தமிழீழம் மலரட்டும் தரணியில்.

அந்நிய இராணுவக் காலடி அழிந்திடும்
எத்தர்கள் கூட்டத்தின் இருப்பிடம் தகர்ந்திடும்
காவல் தெய்வங்கள் கானகம் நீங்கிடும்
ஈனர் பாசறைகளில் இருள் வந்து சூழ்ந்திடும்
மக்கள் மனங்களில் மகிழ்ச்சியே பொங்கிடும்
மாட்சிமை கொண்ட தமிழீழம் மலரட்டும்.

கோடை காலத்துப் பாலை நிலங்களாய்ப்
பரிதவித்த நாம்
சுதந்திர மழைக்காய் விடுதலை வானை
அண்ணாந்து பார்த்தோம்
மலர்களுக்கும் மாஞ்சோலைகட்கும்
வசந்தங்கள் என்றும் மாறி மாறி வந்து போகும்.
மனிதர்கள் நாம் இழந்து விடும்
வசந்தங்களாம் மகத்தான எம் இளமைக் காலங்கள்
மீண்டும் வராமல் போயே போய் விடும்.

எங்கள் மண்ணின் மழலை மொட்டுக்கள்
விரியும் போதாவது வசந்தம் வரட்டும்
நம்பிக்கை ஒளியே வீசும் காலத்தில்
செந்தீப் பொறியாய் தமிழீழம் மலரட்டும்

காடுகள் வயல்கள் களனிகள் நிறையட்டும்
இரத்தச் சேறுகள் தாண்டியெம் வாழ்வு தொடரட்டும்
போரிடும் புலிகளெம் ஜெயத்தினைத் தேடட்டும்
மார்பினில் சுதந்தர மலர் வந்து வீழட்டும்
ஏனினித் துயரென எம்மக்கள் சிரிக்கட்டும்
பாரினில் சுதந்திர ஈழம் மலரட்டும்.

தீட்சண்யன்
18.2.90

Donnerstag, September 16, 2004

திலீபா!

நல்லூரின் வீதியிலே வந்து சிரித்தாய்
மேடையிலே போயமர்ந்து வீரம் விதைத்தாய்
பாடையிலே நீயிறங்கிப் போன கணத்திலே
வேடமிட்ட இந்தியரின் துகிலை உரிந்தாய்.

ஈழமக்கள் எங்களுக்காய் சிலுவை சுமந்தாய்
அடிவயிற்றில் தீ மூட்டி உடலம் எரித்தாய்
புதியதொரு போர் முனையில் நின்று எதிர்த்தாய்
நாவரண்டு உடல் சுருண்டு வேள்வி வளர்த்தாய்

நீ செயலிழந்து வருடங்கள் ஏழானதோ!
எம் நெஞ்சுகளில் உன்நினைவு வேரானதோ!
மரணம்தான் வாழ்க்கையின் முடிவு என்றாலும்
உன்மரணத்திலே வரலாறு ஜனனம் பெற்றதே!

உன் மூச்சு அன்று ஒரு புயலானது
உன் விழிகள் தீ மூட்டும் கனலானது
உலகமெல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்தது
எம் உள்ளங்களில் பூகம்பம் வாய் பிளந்தது.

நெஞ்சத்தில் குடியிருக்கும் தியாக நெருப்பே!
வஞ்சத்தை வெற்றி கொண்ட வானக மலரே!
உன் பாதை வழித்தடத்தில் செல்லுகிறோம் நாம்
வேங்கைக் கொடிநாட்டி வீரநடை போடுகிறோம் நாம்.

தீட்சண்யன்
15.4.94

பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்…

ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன்  –  விமலன் பிறேமராஜன் மாஸ்டரின்...